தாய்லாந்தில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட 54 அரியவகை விலங்குகள் மீட்பு
மும்பை,
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து மும்பைக்கு விமானம் ஒன்று வந்தது. இந்த விமானத்தில் பயணி ஒருவர் அரியவகை உயிரினங்களை கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சுங்க அதிகாரிகள் விமானத்தில் வந்த பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினர்.

சோதனையின்போது ஷாருக்கான் முகமது ஹூசேன் என்ற பயணியின் டிராலி பேக்குகளை அதிகாரிகள் திறந்து பார்த்தனர். அப்போது அதில் உயிருடன் அரியவகை உயிரினங்கள் இருந்தன. தேன் கரடி என அழைக்கப்படும் 2 கிங்காஜூ, உலகிலேயே சிறிய அளவிலான குரங்கு இனத்தை சேர்ந்த 2 குள்ள மார்மோசெட், 50 சிவப்பு காது அரியவகை ஆமைகள் ஆகியவை இருந்தன.
இவை அனைத்தும் அரிய வெளிநாட்டு விலங்கின வகைகள் ஆகும். 54 விலங்குகளை திருட்டுத்தனமாக கடத்தி வந்த ஷாருக்கான் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இந்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், மீட்கப்பட்ட வெளிநாட்டு விலங்கினங்களை பாங்காக்கிற்கு திரும்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Yasmin fathima

