அடையாறு ஆற்றில் ஆகாய தாமரையை எப்போ அகற்ற போறீங்க? - புறநகர் மக்கள் எதிர்பார்ப்பு
அடையாறு ஆற்றில் தண்ணீரே தெரியாத அளவில் ஆகாயத் தாமரை ஆக்கிரமித்துள்ளது. அவற்றை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பால் நீரோட்டம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூரில் தொடங்கி மண்ணிவாக்கம், முடிச்சூர், வரதராஜபுரம், ராயப்பா நகர், திருநீர்மலை, அனகாபுத்தூர், காட்டுப்பாக்கம், மணப்பாக்கம் வழியாக சென்னை கோட்டூர்புரம் அருகே அடையாறு ஆறு பட்டினப்பாக்கம் பகுதியில் கடலில் கலக்கிறது.
மொத்தம், 42 கி.மீ நீளம் கொண்ட அடையாறு ஆற்றில் ஒவ்வொரு ஆண்டு பருவமழையின் போதும் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் பருவமழைக்கு முன் அடையாறு ஆற்றை சீரமைக்கும் பணி நீர்வளத்துறை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் மழையால் அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டம், வரதராஜபுரம் ஊராட்சி பகுதிகள் முழுவதும் தனி தீவாக மாறி வருகிறது.
இதற்கு நிரந்தர தீர்வு காண அரசு போதிய நிதியை ஒதுக்கி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென, அப்பகுதி மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும், தற்போது அடையாறு தொடங்கும் இடம் முதல், கடலில் கலக்கும் இடம் வரை ஆகாயத்தாமரை ஆக்கிரமித்துள்ளது.
இவற்றை அழிக்க ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் செலவு செய்தும், அவற்றை முழுமையாக அகற்ற முடியவில்லை. மேலும், மழை காலங்களில் அடையாற்றில் வெள்ளம் சீராக செல்லும் வகையில் சேதமடைந்த கரைகளை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.



