மகளிர் பெட்டி அருகே தேவையின்றி சுற்றிய 889 பேர் மீது வழக்குப்பதிவு; ரயில்வே காவல்துறை எச்சரிக்கை

கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 2,300 சிறுவர், சிறுமிகள், 100 பெண்கள் மீட்கப்பட்டு, அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்" - காவல்துறை.

மகளிர் பெட்டி அருகே தேவையின்றி சுற்றிய 889 பேர் மீது வழக்குப்பதிவு; ரயில்வே காவல்துறை எச்சரிக்கை

ஜோலார்பேட்டையில் ரயிலில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு நடந்த கொடூரத்தையடுத்து, ரயிலின் மகளிர் பெட்டிக்கு அருகே தேவையில்லாமல் சுற்றித் திரிந்த 889 பேர் மீது வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. பல்வேறு காரணங்களால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுவர்கள், குழந்தைத் தொழிலாளர்கள் ஆகியோரை மீட்டு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பாகச் சென்னையில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

அதில், சுமார் 80 ரயில்வே காவலர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் பேசிய ரயில்வே காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன், ``பல்வேறு இடங்களிலிருந்து வீட்டை விட்டு வெளியேறி, ரயில் நிலையங்களுக்கு வந்து தவித்த சிறுவர், சிறுமிகள் உள்படப் பலரை மீட்டு வருகிறோம். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 2,300 பேரை மீட்டு உள்ளோம். 100 பெண்கள் மீட்கப்பட்டு, அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

ரயில்வே ஸ்டேஷன்

எல்லா ரயில் நிலையங்களிலும் ரயில்வே போலீஸார் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் ரயில்களின் மகளிர் பெட்டிகள் அருகே தேவையில்லாமல் செல்வோர் மீது சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சென்னை ரயில்வே போலீஸ் மாவட்டத்தில் மட்டும் இதுவரை 889 பேர் வழக்குப்பதிவு செய்து உள்ளோம். இதுதவிர, பெண் பயணிகளுக்குத் துண்டுப் பிரசுரம் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். மின்சார ரயிலில் அலாரம் ஒலிப்பான் இருக்கிறது. உதவிக்கு இதைப் பெண்கள் தொட்டால், இன்ஜின் ரயில் ஓட்டுநருடன் பேசலாம். இதுதவிர, ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அதிக அளவில் நிறுவ முயற்சி எடுக்கப்படுகிறது" என்றார்.