பக்தர்களை ஏற்றிச்சென்ற லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - 8 பேர் பலி
மும்பை,
மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் ஹெத் வட்டத்தில் மலைப்பகுதியில் கொஹிடி கிராமத்தில் கேஷ்திர மகாதேவ் குண்டேஷ்வர் (சிவன் கோவில்) என்ற இந்து மத கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு புனேவின் பபல்வாடி கிராமத்தை சேர்ந்த பக்தர்கள் 37 பேர் இன்று மாலை லாரியில் சென்றுள்ளனர். இந்நிலையில், மலைப்பாங்கான பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் லாரியில் பயணித்த 8 பெண் பக்தர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 29 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர், படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, மராட்டிய முதல்-மந்திரி பட்னாவிஸ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதேவேளை, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்ச ரூபாயும், காயமடைந்தோர் குடும்பத்தினருக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அதேபோல், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று மராட்டிய முதல்-மந்திரி பட்னாவிஸ் அறிவித்துள்ளார்.


Yasmin fathima

