குறைந்தபட்ச இருப்புத்தொகை ரூ.50 ஆயிரம் பராமரிக்க வேண்டும்: ஐசிஐசிஐ வங்கி கொடுத்த அதிர்ச்சி

குறைந்தபட்ச இருப்புத்தொகை ரூ.50 ஆயிரம் பராமரிக்க வேண்டும்: ஐசிஐசிஐ வங்கி கொடுத்த அதிர்ச்சி
புதிதாக கணக்கு துவங்குபவர்கள் இனி மாதம் ரூ 50 ஆயிரம் மினிமம் பேலன்ஸ் பராமரிப்பது அவசியம் என ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.;

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய வங்கியான ஐசிஐசிஐ, குறைந்தபட்ச இருப்புத்தொகை எனப்படும் மினிமம் பேலன்ஸ் தொகையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இதன்படி புதிதாக கணக்கு துவங்குபவர்கள் இனி மாதம் ரூ 50 ஆயிரம் மினிமம் பேலன்ஸ் பராமரிப்பது அவசியம். ஏற்கனவே அக்கவுண்ட் வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் என்ற பழைய முறையே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐசிஐசிஐ கூறியிருப்பதாவது:

வரும் ஆகஸ்ட் முதல் பெரு நகரங்களில், உள்ள கிளைகளில் வங்கி கணக்கை தொடங்கும் புதிய வாடிக்கையாளர்கள், தங்களது வங்கிக் கணக்கில் மாதாந்திர குறைந்தபட்ச இருப்பு சராசரி என்பதை ரூ.50 ஆயிரமாக வைத்து இருக்க வேண்டும். புறநகர் பகுதிகளில் உள்ள வங்கிக் கிளைகளில் கணக்குத் தொடங்குவோர், மாதாந்திர குறைந்தபட்ச சராசரி இருப்பாக ரு.25,000-ஐ வைத்து இருக்க வேண்டும். தற்போது வரை ரூ.5,000 ஆக இருந்து வருவது கவனிக்கத்தக்கது.

அதேபோல, கிராமப் பகுதிகளில் உள்ள வங்கி வாடிக்கையாளர்கள் ரூ.10 ஆயிரத்தை குறைந்தபட்ச இருப்பாக இனி வைத்திருக்க வேண்டும். தற்போது இது ரூ.2500 ஆக உள்ளது. இந்த இருப்புத்தொகையை பராமரிக்க தவறினால் 6 சதவீதம் அல்லது ரூ.500 இதில் எது குறைவோ அது அபராதமாக விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. பொதுத்துறை வங்கிகள் மினிமம் பேலன்ஸ் என்ற முறையை ரத்து செய்து வரும் நிலையில் ஐசிஐசிஐ வங்கி வேறு எந்த வங்கியும் இல்லாத அளவுக்கு கடுமையாக உயர்த்தியுள்ளது.