அப்படிப்போடு.. அடியோடு மாறும் திருமழிசை, மாமல்லபுரம்! CMDA முன்வைத்த புதிய திட்டம்
சென்னை: புறநகர் சென்னையாக அறியப்பட்ட திருமழிசை மற்றும் மாமல்லபுரத்தை ஆரோக்கியம், சுற்றுலா மற்றும் நகர வளர்ச்சியின் மையங்களாக மாற்ற 20 ஆண்டு கால திட்டத்தை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இந்த இரண்டு பகுதிகளும் இனி வரும் காலத்தில் வேகமாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...
பெருநகர சென்னையின் விரிவாக்கத்தை நிர்வகிக்கும் நோக்கில், சிஎம்டிஏ புறநகர்ப் பகுதிகளுக்கான புதிய நகர வளர்ச்சி திட்டங்களை தொடங்க இருக்கிறது. இந்த திட்டம் 2025 முதல் 2045 வரை செயல்படுத்தப்படும்..

திருமழிசை திட்டம்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 17 கிராமங்களில் 34.10 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. NH-48, வெளி வட்ட சாலை, மெட்ரோ வழித்தடம் மற்றும் குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் ஆகியவற்றை இந்த பகுதி உள்ளடக்கி இருப்பதால் வளர்ச்சி விரிவானதாக இருக்கும். போக்குவரத்து மையமாகவும், தொழிற்சாலைகள், தொழில்நுட்ப நிறுவனங்கள் என இந்த பகுதி கலப்பு வளர்ச்சியை கொண்டதாக உருவாகும்..
மாமல்லபுரத்தில் சுற்றுலா மற்றும் பாரம்பரிய வளர்ச்சி
மாமல்லபுரத்தில் 123.48 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 25 கிராமங்களை உள்ளடக்கிய வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது சுற்றுலா, பாரம்பரியம் மற்றும் நவீன உள்கட்டமைப்புகளை ஒருங்கிணைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. குறைந்த விலை வீடுகளை உருவாக்குதல், காலநிலை எதிர்கொள்ளும் வலுவான கட்டுமானங்களை உருவாக்குதல் போன்றவை இதில் அடங்கும்.
இது தவிர, பொழுதுபோக்கு மற்றும் விருந்தோம்பல் மண்டலம் உருவாக்கப்படும். அதாவது ஹோட்டல்கள், நீர் விளையாட்டுக்கள் போன்றவை உருவாக்கப்படும். கலைஞர் மாநாட்டு மையம் இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த முயற்சி குறித்து இந்திய வெளிநாட்டு பயண சங்கத்தின் உறுப்பினர் பஷீர் அகமது கூறுகையில், "ECR-ல் நீர் விளையாட்டுகளை ஊக்குவிப்பது வருமானத்தை அதிகரிக்கும்" என்று நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர்.
ஆரோக்கிய மண்டலத்தின் முக்கியத்துவம்
திருமழிசையில் பாரம்பரிய மருத்துவ முறைகளில் கவனம் செலுத்தும் ஆரோக்கிய மண்டலத்தை உருவாக்குவதற்கான திட்டம் உள்ளது. முக்கிய நெடுஞ்சாலைகளுக்கு அருகில் இந்த பகுதி இருப்பதால், இது வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர். இந்த திட்டத்தின் மூலம் சுமார் 25,000 வேலைவாய்ப்புகள் உருவாகும்.
சென்னையின் நெரிசலை குறைத்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கி நிலையான நகர வளர்ச்சியை முன்னேற்றுவதே இந்த திட்டங்களின் முக்கிய நோக்கமாக உள்ளது.


Yasmin fathima

