ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகள் படிக்க மாணவர்களுக்கு அனுமதி?- சென்னை பல்கலைக்கழகம் திட்டம்
இரட்டை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான வழிகாட்டுதல்களை வகுக்கும் பணி தொலைதூர கல்வி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு பயனளிக்கும்.
சென்னை:

சென்னை பல்கலைக்கழகம் கலை மற்றும் அறிவியல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவும் வகையில், இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகளை படிக்க அனுமதிக்க திட்டமிட்டுள்ளது. இந்த கல்வியாண்டு (2025-26) முதல் திறந்த நிலை மற்றும் தொலைதூர கல்வி முறையில் பயிலும் மாணவர்கள் மேலும் ஒரு பட்டப்படிப்பை படிக்க வாய்ப்புள்ளது.
தொலைதூர கல்வி முறையில் படிப்பவர்கள் ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்பு படிப்பதற்கான திட்டங்களில் சேர அனுமதிக்கப்படுவார்கள் என்று சென்னை பல்கலைக்கழகம் தயாரித்துள்ள இரட்டை பட்டப்படிப்புகளுக்கான வரைவு வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு வழிகாட்டுதல்கள் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதலுக்காக வைக்கப்படுகிறது. இந்த இரட்டை பட்டப்படிப்பானது சான்றிதழில் குறிப்பிடப்படும் என்று வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022-ம் ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழுவின் அறிவிப்பை தொடர்ந்து, அதை செயல்படுத்த சென்னை பல்கலைக்கழகம் முடிவு செய்தது. இரட்டை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான வழிகாட்டுதல்களை வகுக்கும் பணி தொலைதூர கல்வி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கூறியதாவது:-
தேசிய கல்விக் கொள்கை-2020 பரிந்துரைகளில் இரட்டை பட்டம் என்பது இடம்பெற்றுள்ளது. வணிகம், கலை மற்றும் அறிவியல் படிப்புகளை படிக்கும் மாணவர்கள் கூடுதல் பாடத்தை படிப்பதன் மூலம் தங்களின் திறமைகளை வளர்த்துக்கொள்ள முடியும். பிளஸ்-2 தேர்வுகளில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றதால் நகரங்களில் உள்ள கல்லூரிகளில் பி.காம். சேர்க்கை மிகவும் கடினமாக உள்ளது.
பி.ஏ. பொருளாதாரம் படிக்கும் ஒரு மாணவர் தொலைதூர கல்வி முறையில் பி.காம் படிப்பில் சேர்ந்து ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகளை படிக்கலாம். இது அவர்களுக்கு ஆர்வமுள்ள துறையில் வேலை வாய்ப்பை பெற உதவும். இது கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு பயனளிக்கும். தொலைதூர கல்வி முறையில் பி.சி.ஏ. மற்றும் பி.பி.எம். பட்டம் பெறுவது கலை மற்றும் அறிவியல் மாணவர்களுக்கு மிகவும் மதிப்புமிக்கதாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.


Yasmin fathima

