தவெக மாநாட்டுக்காக பேனர் வைக்க முயன்ற கல்லூரி மாணவர்.. மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சோகம்
ஸ்ரீவில்லிபுத்தூர்,
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த ஆண்டு நடந்தது. இந்த நிலையில் அக்கட்சியின் 2-வது மாநில மாநாடு மதுரையில், தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பகுதியான பாரபத்தியில் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.
இதற்காக 506 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டு, மாநாட்டுக்கான ஏற்பாடு மும்முரமாக நடந்து வருகிறது. குறிப்பாக, மாநாட்டு மேடை, இருக்கைகள், மின்விளக்குகள் அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. மீதம் உள்ள பணிகளை ஏற்பாட்டு குழுவினர் இரவு, பகலாக செய்து வருகின்றனர்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே தவெக மதுரை மாநாட்டிற்காக பேனர் அமைக்கும் பணியில் ஈடுபட்டபோது மின்சாரம் தாக்கியதில் காளீஸ்வரன் (வயது 19) என்ற இளைஞர் உயிரிழந்தார்.
கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவராக இருந்த காளீஸ்வரன், மாநாட்டிற்கான ஏற்பாடுகளில் பங்கேற்று வந்தபோது இந்த துயர சம்பவம் நடந்தது. திடீர் மின்சாரம் தாக்கியதால் அவர் சம்பவ இடத்திலேயே பலியாகினார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது


Yasmin fathima

