குன்னூரில் நாய்கள் விரட்டியதால் மரத்தில் ஏறிய கரடி - தூக்கம் தொலைத்த கிராம மக்கள்
குன்னூர்: குன்னூரில் நள்ளிரவில் நாய்கள் துரத்தியதால் ஓடிய கரடி மரத்தில் ஏறியதால் அச்சத்தில் மக்கள் தூக்கத்தை தொலைத்தனர். மலை மாவட்டமான நீலகிரியில் கடந்த சில ஆண்டுகளாக எவ்வித பயமும் இன்றி வனவிலங்குகள் நகர மற்றும் கிராமப்புற பகுதிகளில் நடமாடி வருகின்றன.

இந்நிலையில் குன்னூர் கக்காச்சி அருகே உள்ள மேல் பாரதி நகர் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு சுமார் 12 மணி அளவில் இரண்டு கரடிகள் சுற்றி திரிந்தன. இதனைப் பார்த்த தெரு நாய்கள் அவற்றை துரத்தியதால் ஒரு கரடி அங்கிருந்து ஓடியது. மற்றொரு கரடி கோயில் முன்பு இருந்த மரத்தின் மீது ஏறி நின்று கொண்டது. இதை பார்த்த மக்கள் செய்வதறியாமல் திகைத்துப் போயினர்.
பின்னர் உடனடியாக வனத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் விரைந்து வந்த வனதுறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி மரத்தில் இருந்த கரடியை விரட்டினர். நள்ளிரவில் கிராமத்துக்குள் புகுந்த கரடியால் தூக்கத்தை இழந்து அச்சத்துடன் இருந்ததாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.



