செங்குன்றம் | இளைஞரை கொலை செய்து மரத்தில் தொங்கவிட்ட வழக்கில் 2 பேர் கைது
செங்குன்றம்: திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அருகே உள்ள விளாங்காட்டை அடுத்த மல்லிமா நகர் பகுதியில் உள்ள கால்பந்து மைதானத்தில் இளைஞர் ஒருவரின் உடல், மரத்தில் தொங்கிய நிலையில் இருப்பதாக நேற்று முன் தினம் காலை செங்குன்றம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சம்பவ இடம் விரைந்த செங்குன்றம் போலீஸார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், உயிரிழந்த இளைஞர், பெரியபாளையம் அருகே உள்ள நெய்வேலி பகுதியை சேர்ந்த ராஜேஷ் (19) என்பதும், நள்ளிரவில் நண்பர்கள் சேர்ந்து மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் ராஜேஷ் கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது.
இதுதொடர்பாக போலீஸார், நிலுவையில் உள்ள செங்குன்றம் உள்ளிட்ட காவல் நிலைய எல்லைகளில் நடந்த கொலை வழக்குகளில் தொடர்புடைய. மல்லிமா நகரை சேர்ந்த சந்தோஷ் (22), பொன்னேரி பகுதியை சேர்ந்த இளம்பரிதி (22) ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர். நண்பர்களான ராஜேஷ், சந்தோஷ், இளம்பரிதி ஆகியோர், நண்பர்கள் தினமான கடந்த 3-ம் தேதி இரவு, மல்லிமா நகர், கால்பந்து மைதான பகுதியில் மது அருந்தியுள்ளனர்.
அப்போது, அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக, சந்தோஷ், இளம்பரிதி ஆகியோர், கத்தி உள்ளிட்டவற்றால், ராஜேஷை கடுமையாக தாக்கி கொலை செய்துவிட்டு, மரத்தில் தொங்கவிட்டுள்ளனர் என கைதானவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் தெரிய வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



