வாழ்நாள் சேமிப்பு தங்கம்.. மதிப்பு கோடிகள்.. விழுப்புரம் டாக்டர் தம்பதி வீட்டில் இப்படியுமா நடந்தது?
கடலூர்: கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள புதுபிள்ளையார்குப்பம் மேற்கு தெருவை சேர்ந்த ராஜா விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டாக்டராக உள்ளார். இவரது மனைவியும் விழுப்புரத்தில் டாக்டராக உள்ளார். இவர்கள் வாரம் ஒருமுறை தான் தங்களது சொந்த வீட்டிற்கு சென்று வந்துள்ளார்களாம். இவர்களது வீட்டில் 158 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் ஒரு கோடியே 16 லட்சம் ஆகும்.. எப்படி கொள்ளை நடந்தது என்பதை பார்ப்போம்..

வாழ்நாள் முழுக்க சேமித்த பணம், நகைகளை ஒரே நாளில் பறிகொடுப்பது என்பது மிகவும் கஷ்டமானது ஆகும். திருடர்கள் ஒருவரின் வாழ்நாள் சேமிப்பை, வாழ்வாதாரத்தை பறித்து சொகுசாக வாழ்கிறார்கள்.. அவர்கள் சிக்கினால் பலவருடம் சிறையில் தான் மீதி வாழ்க்கையை வாழ வேண்டியதிருக்கும். ஆனால் அதனை பற்றி கவலைப்படாமல் திருடுபவர்கள் அதிகமாகவே உள்ளார்கள். சிசிடிவி காட்சிகள், போலீஸ் கண்காணிப்பு, அக்கம் பக்கம் உள்ளவர்கள், தெரு நாய்கள் , வீட்டு நாய்கள் என பல கண்காணிப்பை மீறி திருடர்கள் கைவரிசை காட்டுவது அடிக்கடி நடக்கிறது...
திடீரென வீடு புகுந்து திருடர்கள் திருடுவது இல்லை..முன்கூட்டியே திட்டமிட்டு, ஆள் எப்போது வருவார்கள், எப்போது இருக்க மாட்டார்கள் என்பதை அறிந்து, தடயமே இல்லாமல் திருடுவதை பல திருடர்கள் வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். அவர்களை போலீசார் கடும் சவாலுக்கு நடுவில் தான் பிடிக்கிறார்கள். கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்..
பண்ருட்டியில் கொள்ளை
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள புதுபிள்ளையார்குப்பம் மேற்கு தெருவை சேர்ந்த 45 வயதாகும் ராஜா டாக்டர் ஆவார். இவரது மனைவி ஆர்த்தி. இவரும் டாக்டர் ஆவார். ராஜா விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வருகிறார். டாக்டர் ஆர்த்தி விழுப்புரத்தில் தனியாக கிளினிக் நடத்தி வருகிறார். இதற்காக 2 பேரும் விழுப்புரத்திலேயே பணியாற்றுவதால் அங்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கேயே வசித்து வருகின்றனர்.
வீட்டில் கொள்ளை
அதேநேரம் வாரம் ஒரு முறை மட்டும் சொந்த ஊரான பண்ருட்டி அருகே உள்ள புதுபிள்ளையார்குப்பத்திற்கு வந்து செல்வார்கள். புதுபிள்ளையார்குப்பத்தில் உள்ள வீட்டின் கீழ்தளத்தில் காசிலிங்கம் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். ராஜா குடும்பத்தினர் வரும்போதெல்லாம் முதல் தளத்தில் தங்குவதை வழக்கமாக வத்துள்ளார்கள். இந்த நிலையில் நேற்று காலையில் காசிலிங்கம், முதல் தளத்திற்கு சென்றார். அப்போது அங்குள்ள முன்பக்க கதவு பூட்டு உடைந்து கிடந்திருக்கிறது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ பூட்டும், சுவர் அலமாரி பூட்டும் உடைக்கப்பட்டிருந்துள்ளது. அங்கு இருந்த துணி மணிகள் உள்ளிட்ட பொருட்கள் வீடு முழுக்க சிதறிக்கிடந்தன.
மோப்ப நாய்
அதன்பேரில் கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், பண்ருட்டி டிஎஸ்பி ராஜா, காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர். அங்கு தீவிர விசாரணை நடத்தினார்கள். இந்த கொள்ளை வழக்கில் துப்பு துலக்குவதற்காக கடலூரில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. கொள்ளை நடந்த வீட்டை மோப்பமிட்ட அந்த நாய், அங்கிருந்து சிறிது தூரம் வரை ஓடிச்சென்று நின்றது. ஆனால் அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை..
கைரேகை நிபுணர்கள்
இதனை தொடர்ந்து கைரேகை நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள், கொள்ளை நடந்த வீட்டில் பதிவான மர்மநபர்களின் கைரேகைகளையும், அவர்கள் விட்டுச்சென்ற தடயங்களையும் சேகரித்தனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.1 கோடியே 16 லட்சத்து 92 ஆயிரம் என்று கூறப்படுகிறது. சிசிடிவி காட்சிகள் மற்றும் அருகில் உள்ள சிசிடிவி காட்சிகள் மற்றும் வாகனங்கள் சென்ற விவரங்களை சேகரித்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. கொள்ளையர்கள் விரைவில் சிக்குவார்கள் என எதிர்பார்க்கலாம்...


Yasmin fathima

