சிபில் ஸ்கோர் சிக்கல்: விவசாயிகளின் உரிமைகளை மீட்டெடுக்கும் உண்ணாவிரத போராட்டம் - தற்காலிக ஒத்திவைப்பு

சிபில் ஸ்கோர் சிக்கல்: விவசாயிகளின் உரிமைகளை மீட்டெடுக்கும் உண்ணாவிரத போராட்டம் - தற்காலிக ஒத்திவைப்பு
நிதியாண்டிற்கு விவசாயிகளுக்கு பயிர்க் கடன்கள் பழைய நடைமுறையின்படி வழங்கப்படும் என கூட்டுறவு வங்கி

2025-26 நிதியாண்டிற்கு விவசாயிகளுக்கு பயிர்க் கடன்கள் பழைய நடைமுறையின்படி வழங்கப்படும் என கூட்டுறவு வங்கி அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்கங்களில் சிபில் ஸ்கோர் நிபந்தனைகளை நீக்கி, பழைய கடன் வழங்கும் முறையை மீட்டெடுக்கக் கோரி, ஆகஸ்ட் 15 அன்று தஞ்சையில் நடைபெறவிருந்த விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2025-26 நிதியாண்டிற்கு விவசாயிகளுக்கு பயிர்க் கடன்கள் பழைய நடைமுறையின்படி வழங்கப்படும் என கூட்டுறவு வங்கி அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர். பாண்டியன், தமிழக அரசு நிரந்தர தீர்வு காணும் வரை போராட்டம் மீண்டும் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

2008 ஆம் ஆண்டில், அப்போதைய தமிழக அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களை கூட்டுறவு வங்கிகள் எனப் பெயர் மாற்றம் செய்தது. இந்த நடவடிக்கைக்கு அப்போதிலிருந்தே விவசாயிகள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. தற்போதைய நிலையில், மத்திய அரசு கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, தமிழக அரசு புதிய நிபந்தனைகளை விதித்தது. குறிப்பாக, சிபில் ஸ்கோர் (CIBIL Score), பான் கார்டு உள்ளிட்ட 12 வகையான சான்றுகள் கேட்டு, விவசாயிகள் பயிர்க் கடன் பெறும் உரிமையை அடியோடு ரத்து செய்தது. இது விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

விவசாயிகள் தங்கள் கடன் பெறும் உரிமை பறிக்கப்பட்டதற்கு எதிராகப் போராட்டங்களை தீவிரப்படுத்தினர். தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளை மீண்டும் கூட்டுறவு சங்கங்களாகவே பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றும், பழைய நடைமுறையைப் பின்பற்றி நிபந்தனையின்றி விவசாயிகளுக்கு கடன் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர். இந்த கோரிக்கைகளை முன்வைத்து ஆகஸ்ட் 15 அன்று தஞ்சையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என பி.ஆர். பாண்டியன் அறிவித்திருந்தார்.

விவசாயிகளின் இந்த போராட்ட அறிவிப்பைக் கண்ட கூட்டுறவு வங்கி அதிகாரிகள், தொடர்ச்சியாக விவசாய சங்கப் பிரதிநிதிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்தனர். இதன் விளைவாக, ஒரு முக்கியமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூலை 27 ஆம் தேதி முதல், பழைய நடைமுறையைப் பின்பற்றி, நடப்பு 2025-26 ஆம் நிதியாண்டில் விவசாயிகளுக்கு பயிர்க் கடன் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளது கூட்டுறவு வங்கி...

இந்த உத்தரவை ஏற்று, சுதந்திர தினத்தன்று நடத்துவதாக அறிவிக்கப்பட்ட தஞ்சை உண்ணாவிரதம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த பி.ஆர். பாண்டியன், "தமிழக அரசு நிரந்தரமாக தீர்வு காணும் வரை மீண்டும் போராட்டத்தை அறிவிக்க தயங்க மாட்டோம்" என்று உறுதியாகத் தெரிவித்தார்.