பொங்கல் பரிசு ரூ.2,500.. தீபாவளிக்கு சேலை..” அதிமுக ஆட்சியில்.. வாக்குறுதிகளை அள்ளி வீசிய எடப்பாடி..
தஞ்சை: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடில் இன்று "தமிழகத்தை மீட்போம், மக்களை காப்போம்" சுற்றுப்பயணம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சி அமைந்தவுடன் பொங்கலுக்கு ரூ.2,500 வழங்கப்படும் என்றும், தீபாவளிக்கு தரமான இலவச சேலை வழங்கப்படும் என்றும் கூறினார். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தமிழ்நாட்டில் இனி ஏழைகள் இல்லை என்ற நிலை உருவாக்கப்படும் என்றும் பழனிசாமி கூறினார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே இருக்கும் நிலையில், திமுக, அதிமுக கட்சிகள் தற்போதே மக்களை சந்தித்து வருகின்றன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழகத்தை மீட்போம் மக்களை காப்போம் என்ற பெயரில் மக்களை சந்தித்து வருகிறார்..

பொங்கல் பரிசு ரூ.2,500 வழங்கப்படும்
அந்த வகையில் இன்று டெல்டா மாவட்டமான தஞ்சையில் ஒரத்தநாடு தொகுதியில் மக்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி ஆளும் திமுக அரசை விமர்சித்து பேசினார். மேலும் அதிமுக ஆட்சி அமைந்தால் பொங்கல் பண்டிகைக்கு ரூ.2,500 வழங்கப்படும் என்றும், தீபாவளிக்கு தரமான சேலை வழங்கப்படும் என்றும் கூறினார்...
ஏழைகளே இல்லாத நிலை ஏற்படும்
எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- ''அதிமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பொங்கல் பரிசு ரூ. 2,500 வழங்கப்படும். இதேபோன்று தீபாவளி பண்டிகையின்போது பெண்களுக்கு தரமான இலவச சேலை வழங்கப்படும். 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக ஆட்சி அமைந்ததும், தமிழ்நாட்டில் இனி ஏழைகள் இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்.
காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று 22 நாட்கள் நாடாளுமன்றத்தையே ஒத்திவைத்தேன்.. இது அதிமுகவின் திறமை. தில்லு, திராணி.. மக்கள் மீதான அக்கறை. விவசாயிகள் மீதான அக்கறை.. ஆனால், 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கீங்களே.. ஏன் உங்களால் நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சினையை எழுப்பவில்லை. இத பண்ண மாட்டாங்க.. ஏனென்றால் மக்களை பற்றி கவலைப்படாத ஓர் அரசாங்கம்.. பாய் பாய் ஸ்டாலின்...
துர்கா அம்மாவும் வந்துட்டாங்க
திமுக என்ன சாதனை செய்திருக்கிறது. உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வர் ஆக்கியது தான். திமுக ஆட்சிக்கு வந்து 50 மாத ஆட்சியில் குடும்பத்தில் இருக்கிற அத்தனை பேருக்கும் பொறுப்புக்கு வர வைத்தது தான். ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி, தயாநிதி மாறம் இனும் எத்தனையோ பேர் இருக்காங்க. இப்போ துர்கா அம்மாவும் வந்துட்டாங்க..
புத்தகம் வெளியீடு என்ற பெயரில் அந்த அம்மாவும் மேடை ஏறி பேச வந்துட்டாங்க.. அப்போ அவங்க சொல்றாங்க.. பல்வேறு வேலைகளை விட்டுவிட்டு உதயநிதி இந்த புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்திருப்பதற்கு நன்றி என்று சொல்றாங்க.. உதயநிதிக்கு அப்படி என்ன வேலை இருந்தது என்று தெரியவில்லை...
சொன்னாங்களே.. செஞ்சாங்களா?
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஏழைகளுக்கு என்று எந்த ஒரு திட்டமும் கொண்டு வரப்படவில்லை. 100 நாள் வேலைத்திட்டம் ஊதியம் உயர்த்தப்படும் என்று சொன்னாங்க.. செஞ்சாங்களா.. கியாஸ் சிலிண்டருக்கு மாதம் 100 ரூபாய் தருவோம் என்று சொன்னாங்க.. மானியம் கொடுத்தார்களா? இப்படி பல இதை சொல்லலாம்...
மாணவர்கள் கல்விக்கடன் ரத்து, சொன்னாங்க.. செய்தார்களா.. மாதந்தோறும் மின் கணக்கீடு.. சொன்னாங்க செஞ்சாங்களா.. இப்படி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு அதில் ஒன்றையும் திமுக நிறைவேற்றவில்லை. இப்படி பித்தலாட்டம் செய்யும் திமுக ஆட்சிக்கு 2026 ஆம் ஆண்டு தேர்தலில் மக்கள் மரண அடி கொடுப்பாங்க...
முதல்வர் ஸ்டாலின் எங்கு சென்றாலும் எங்களுக்கு மக்கள் எழுச்சி இருக்கிறது. திமுக 200 இடங்களில் வெல்லும் என கூறுகிறார். ஓரத்த நாட்டில் கூடியுள்ள மக்கள் எழுச்சியை பாருங்கள் ஸ்டாலின். வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெல்லும்.. இவ்வாறு அவர் கூறினார்...


Yasmin fathima

