சென்னை சேத்துப்பட்டில் ஒரே தண்டவாளத்தில் 2 மின்சார ரயில்கள்.. பதறிய பயணிகள்! என்ன நடந்தது
சென்னை: சென்னை - செங்கல்பட்டு வழித்தடத்தில், சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் ஒரே நேரத்தில் ஒரே தண்டவாளத்தில் அடுத்தடுத்து 2 மின்சார ரயில்கள் நின்றதால் பயணிகள் பதறிப்போயினர். ஒரு ரயில் ஏற்கனவே தண்டவாளத்தில் நின்றிருந்த நிலையில், அதே தண்டவாளத்தில் வந்து நின்ற மற்றொரு ரயிலால் பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர்
ரயில் விபத்துக்கள் அதிகரித்து வரக்கூடிய சூழலில், இது போன்ற நிகழ்வு பயணிகள் மத்தியில் பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தியது. முதலில் சென்ற ரயில் தண்டவாளத்தில் எதற்காக நிறுத்தப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் அதற்கு அடுத்து வந்த ரயில் தெரிந்து தான் அதே தண்டவாளத்தில் பின்னால் வந்து நிறுத்தப்பட்டது என கூறப்படுகிறது. இதையடுத்து ஒரு ரயில் புறப்பட்ட பின்னர், பின்னால் நின்ற ரயிலும் புறப்பட்டு சென்றது

ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள்
சென்னையில் மின்சார ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகிறார்கள். குறிப்பாக சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு வரையிலான வழித்தடம் தான் மிக முக்கியமான ரூட் ஆக உள்ளது. இந்த வழித்தடத்தில் பயணிகள் கூட்டம் எப்போதும் அலைமோதும். பீக் நேரங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். ஒரு மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டாலே அன்றைய தினம் சென்னை நகரமே ஸ்தம்பித்து போய்விடும் என்று சொல்லலாம்
அந்த அளவுக்கு பயணிகளின் போக்குவரத்து சேவைக்கு மின்சார ரயில்கள் இன்றியமையாததாக உள்ளன. எனினும், சமீப நாட்களாக இந்த ரூட்டில் மின்சார ரயில்கள் அடிக்கடி தாமதமாக இயக்கப்படுவதாக பயணிகள் மத்தியில் முன்வைக்கப்படும் புகாராக உள்ளது.
இது ஒருபக்கம் இருக்க நேற்று சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் காலை 8.50 மணியளவில் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு கடற்கரை நோக்கி சென்று கொண்டிருந்த மின்சார ரயில் 9.40 மணிக்கு சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. எதற்காக நிறுத்தப்பட்டது என்பது தெரியவில்லை. அப்போது அதன் பின்னால் கடற்கரை நோக்கி வந்த மற்றொரு ரயிலும் இதே தண்டவாளத்தில் வந்தது
.பதறிப்போன பயணிகள்
இதனால் ரயிலில் இருந்த பயணிகள் மட்டுமின்றி ரயில் நிலையத்தில் இருந்த பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் லோகோ பைலட்டுகள் தெரிந்தே தான் மெதுவாக வந்து ரயிலை ஒரே தண்டவாளத்தில் அந்த ரயிலுக்கு பின்னால் நிறுத்தியுள்ளனர். ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்களால் பயணிகள் சிறிது நேரம் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
அந்த நேரத்தில் ஆபத்தை உணராத சில பயணிகள் பலர் பின்னால் இருந்த ரயிலில் இருந்து இறங்கி முன்னால் நின்ற ரயிலில் ஏறினார்கள். இதையடுத்து, 9.50 மணியளவில் முன்னால் நின்ற ரயிலும், 9.55 மணியளவில் மற்றொரு ரயிலும் ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்து புறப்பட்டு சென்றது. எனினும், 2 ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் நிறுத்தப்பட்ட சம்பவம் பயணிகள் இடையே பீதியை ஏற்படுத்தியது
பயணிகள் கோரிக்கை
சமீப காலமாக ரயில் விபத்துக்கள் அதிகரித்து வரும் சூழலில் ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள் அடுத்தடுத்து நின்ற நிகழ்வு பயணிகள் மத்தியில் பெரும் அச்ச உணர்வை ஏற்படுத்தியது. அதேபோல, பீக் நேரங்களில் இனி கூடுதலாக ரயில் இயக்கப்பட வேண்டும் என்பதோடு, ரயில்கள் சரியான நேரத்தில் வருவதையும் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்


Yasmin fathima

